நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் மூன்றும் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனையடுத்து, 150 ஆண்டு கால நடைமுறையில் இருந்த IPC,CRPC மற்றும் Indian Evidence Act ஆகிய சட்டங்கள் முழுவதுமாக நீக்கப் பட்டுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1860ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் நோக்கம் நீதி வழங்குவது அல்ல. தண்டனை வழங்குவதாகும். எனவே இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று கூறி உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் 3 புதிய குற்றவியல் சட்டங்களைத் தாக்கல் செய்தார்.
ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டங்களுக்கு, டிசம்பர் மாதம், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, 2024ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்திய தண்டனைச் சட்டம்- பாரதிய நியாய சன்ஹிதாவாகவும், குற்றவியல் நடைமுறை சட்டம்-நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவாகவும், இந்திய சாட்சியச் சட்டம்- பாரதிய சாக்ஷய சட்டமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருந்த இந்திய தண்டனை சட்டத்தில் 511 பிரிவுகள் இருந்தன. அதற்கு மாற்றாக கொண்டுவந்துள்ள பாரதிய நியாய சன்ஹிதாவில் 358 பிரிவுகள் உள்ளன. இதில்,மொத்தம் 20 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 33 குற்றங்களுக்கான சிறைத்தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. 83 குற்றங்களுக்கு அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 23 குற்றங்களில் குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்படும். ஆறு குற்றங்களுக்கு சமூக சேவைக்கான தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பழைய சட்டத்தில் இருந்த 19 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய பாரதிய நியாய சன்ஹிதாவில், பெண்கள் மீதான தாக்குதல், கூட்டுப் பாலியல் வன்முறை, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை,கொலை,கடத்தல் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 484 பிரிவுகள் இருந்தன.இப்போது பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதாவில் 531 பிரிவுகள் உள்ளன. இதில், மொத்தம் 177 விதிகள் மாற்றப்பட்டு ஒன்பது புதிய பிரிவுகள் மற்றும் 39 புதிய துணைப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 44 புதிய விதிகள் மற்றும் விளக்கங்களுடன் 35 பிரிவுகளில் காலக்கெடுவும், 35 இடங்களில் ஆடியோ-வீடியோ வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. பாரதிய நகரிக்சுரக்ஷா சன்ஹிதாவில் மொத்தம் 14 பிரிவுகள் நீக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
167 விதிகள் கொண்ட பழைய ஆதாரச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வந்துள்ள பாரதிய சாக்ஷய சட்டத்தில், 170 விதிகள் உள்ளன. புதிய சட்டத்தில், மொத்தம் 24 விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இரண்டு புதிய விதிகள் மற்றும் ஆறு துணை விதிகள் சேர்க்கப்பட்டு, ஆறு விதிகள் நீக்கப் பட்டுள்ளன.
இந்த புதிய சட்டங்களில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
(gfx in) காவல் துறை விசாரணை முதல் நீதிமன்றம் வரை முழு செயல்முறைகளும் கணினிமயமாக்கப் பட்டுள்ளது.
இனி, காவல் நிலையத்துக்குச் சென்றுதான் புகார் கொடுக்க வேண்டும் என்பதில்லை. எங்கிருந்தும் e -FIR எனப்படும் மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாக புகார் கொடுக்க முடியும்.
Zero FIR என்ற புதிய நடைமுறையின் மூலம், இனி எந்த ஒரு காவல் நிலையத்திலும் குற்றத்துக்கு எதிராக புகாரைப் பதிவு செய்யமுடியும். மேலும் முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்ய முடியும்.
காவல் துறையினரின் முழு விசாரணை நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை உள்ள வழக்குகளில் தடயவியல் விசாரணை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
நீதிமன்ற அழைப்பாணைகள் இனி மின்னணு முறையில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும் சரியான நேரத்தில் தீர்ப்பு கூறுவதற்கு ஏதுவாக, இனி வழக்கு விசாரணையை அதிக பட்சம் இரண்டு முறை மட்டுமே ஒத்திவைக்க நீதிமன்றம் அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பதிவு செய்யப் பட்ட வழக்குகளில் குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய 90 நாடுகள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. மேலும் விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் இந்த சட்டம் தெரிவிக்கிறது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவது, அல்லது குற்றச் செயல்களில் அவர்களை ஈடுபடுத்துவது இனி கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். 18 வயது நிறைவடையாத சிறுவர் சிறுமியை விற்பதும் வாங்குவதும் மிக கொடிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர், சிறுமியருக்கு எதிராக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தால் ஆயுள் தண்டனை அல்லது மரணத் தண்டனை விதிக்க இந்த புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையில், சமத்துவத்தை நிலைநாட்டும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமையைக் காக்கும் இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.