மேற்கு வங்கத்தில், பட்டப் பகலில் நடுத் தெருவில், பொது மக்கள் முன்னிலையில், ஒரு ஆணையும் பெண்ணையும் அவர்கள் சுயநினைவு இழக்கும் வரை, ஒருவர் பிரம்பால் சரமாரியாக தாக்கிய சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு .
மேற்கு வங்க மாநிலத்தில் ,உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சோப்ராவில் ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் பட்டப் பகலில் நடுத்தெருவில் பொது மக்கள் முன்னிலையில், ஒருவர் பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடிவாங்கிய ஆணும், பெண்ணும் முறை தவறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, அக்கிராமத்தில் நடந்த கட்டப் பஞ்சாயத்து கூட்டத்தில் குற்றம் செய்தவர்களுக்குப் பிரம்பு அடி தண்டனை கொடுக்க முடிவு செய்ததாகவும் அதன்படி பொது மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
தாலீபான் இஸ்லாமிய அடிப்படைவாத பாணியில் , இன்சாப் சபா வழங்கிய உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 28 ஆம் தேதி நடந்த இந்த கொடூரத் தாக்குதல் வீடியோவை சிபிஎம் மாநிலச் செயலாளர் முகமது சலீம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இங்கே மேற்கு வங்கத்தில் கங்காரு நீதிமன்றம் போல ஜேசிபி என்ற புனைபெயர் கொண்ட அதிகாரப் பூர்வ குண்டர்கள் தனி நீதிமன்றம் நடத்துகிறார்கள் என்றும், அவர்களே சுருக்கமாக விசாரித்து விட்டு தண்டனை வழங்குகிறார்கள் என்றும் முகமது சலீம் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை எடுத்தவர் காவல்துறையினரால் அராஜகமான முயைில் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டிருக்கிறார் என்று பதிவிட்டுள்ள முகமது சலீம், இது தான் மம்தாவின் புல்டோசர் நீதி என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இஸ்லாம்பூர் காவல் துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, தஜிமுல் என்ற நபரைக் கைது செய்துள்ளனர் .
விசாரணையில், கைதான தஜிமுல் சோப்ரா பகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஹமீதுல் ரகுமானுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தெரிய வந்துள்ளது.
மேற்குவங்கத்தில் கடந்த 25 ஆம் தேதி, ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி,தலைமுடியைப் பிடித்து தெருவில் தர தர வென இழுத்துச் சென்ற சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.
இது மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக இல்லை என்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன என்று பாஜக கடுமையாக குற்றம் சாட்டி இருக்கிறது.
‘ஷரியா சட்டம்’ போன்ற ஒரு கொடூர ஆட்சி மேற்கு வங்கத்தில் கொண்டுவரும் பாதையில் திரிணாமுல் காங்கிரஸ் நடக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ள பாஜகவின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை நடைமுறை படுத்தும் மாநிலமாக மேற்கு வங்கம் மாறுகிறதா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் அமித் மாளவியா,”மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சியின் அசிங்கமான முகம் இது என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்றும், ஒவ்வொரு கிராமத்திலும் சந்தேஷ் காலி சம்பவங்கள் நடக்கின்றன என்றும், தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
மேலும் பாஜக தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் , தனது எக்ஸ் தளத்தில் ஒரு பெண் ஆளும் மாநிலத்தில் இது தான் பெண்களுக்கு பாதுகாப்புக்கான நிலவரம் என்று தெரிவித்துள்ளார்.