அமெரிக்காவில் நேரடி விவாதத்தில் தடுமாறிய அதிபர் ஜோ பைடனை மாற்றிவிட்டு வேறு ஒருவரை அதிபர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஆளும் ஜனநாயக கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளது. அது பற்றி ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிட உள்ளனர்.
இரு கட்சிகளும் விரைவில் நடத்த இருக்கிற தங்கள் கட்சி மாநாட்டில், தங்கள் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்க இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் , ஜோ பைடனும், டிரம்பும் நேரடி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர்தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டிக் கொண்டனர்.
ஒட்டு மொத்தமாக அந்த விவாத நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடன் பல இடங்களில் தடுமாறினார். மேலும், ட்ரம்பின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அதிபர் ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் ஆளும் ஜனநாயக கட்சியினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜோ பைடனின் முதுமையே தடுமாற்றத்துக்குக் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் மாற்றப்படலாம் என்றும் அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிக்சல் நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், அதிபர் வேட்பாளரான ஜோ பைடனை மாற்றுவதற்கான தேவை இல்லை என்று ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் நிராகரித்துள்ளனர். மேலும், குடியரசு கட்சியினர் தான், டொனால்ட் டிரம்ப்க்குக் பதிலாக வேறு நபரைத் தேடவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே , இந்தத் தேர்தல், தன் வாழ்நாள் முழுவதும் சாதாரண மக்களுக்காகப் போராடிய ஒருவருக்கும், தன்னைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்ட ஒருவருக்கும் இடையிலான தேர்தலாக உள்ளது என்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.