மாற்றம் என்ற ஒற்றைச் சொல்லை வைத்து , பிரிட்டன் அரசியலையே மாற்றிக் காட்டியிருக்கிறார், கெயர் ஸ்டாமர். அவர் தலைமையிலான தொழிலாளர் கட்சி 410 இடங்களில் வெற்றி பெற்றதால் கெயர் ஸ்டாமர் பிரிட்டன் பிரதமராகி உள்ளார். இந்த சாதனையை படைத்த கெயர் ஸ்டாமர் யார்? அவரது பின்னணி பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
61 வயதான பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டாமர், தேர்தல் பிரச்சாரத்தின் போது, சிறுவயதில் தனது குடும்பத்தில் கடுமையான நிதி நெருக்கடிகளைச் சந்தித்ததாக தெரிவித்திருந்தார்.
1962ம் ஆண்டு, செப்டம்பர் 2ம் தேதி லண்டன் புறநகரில் உள்ள சவுத் வார்க்கில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் கெயர் ஸ்டாமர். அவரது தந்தை rodney starmer சிறிய தொழிற்சாலையில் பணியில் இருந்தார். செவிலியராக இருந்த தாய் josephine நீண்ட காலமாகவே அரியவகை நோயால் பாதிக்கப் பட்டிருந்தார். சிறுவயதில், தந்தையின் தொழிலுக்கு உதவியாகவும், தாயாருக்கு பணிவிடை செய்பவருமான இருந்துவந்துள்ளார் கெயர் ஸ்டாமர்.
குடும்பத்தில் முதல் பட்டதாரியான கெயர் ஸ்டாமர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற பின்னர், மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சட்ட ஆலோசகராக பணி புரிந்திருக்கிறார்.
இங்கிலாந்தின் உயரிய விருதான ‘சர்’ பட்டம் பெற்ற கெயர் ஸ்டாமர் 2015 ஆம் ஆண்டு முதன்முறையாக தொழிலாளர் கட்சியின் சார்பில் தேர்தலில் நின்றார். போட்டியிட்ட முதல் தேர்தலில் 17,048 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். இந்த தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன் அவரது தாயார் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது வழக்குகள் இயக்குநராகவும் பணியில் திறமையாக செயல்பட்டு பலரது பாராட்டுக்களைப் பெற்றிருந்தார் கெயர் ஸ்டாமர்.
அல்-கொய்தா இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான பிரிட்டனின் முதல் வழக்கை இவர் கையாண்ட விதத்தால் பிரிட்டனின் 9/11 தவிர்க்கப்பட்டதாக இன்றும் பிரிட்டன் மக்கள் இவரைக் கடவுள் போல் பார்க்கின்றனர்.
ஸ்டார்மர் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செலவுகள் மற்றும் தொலைபேசிஒட்டுக் கேட்பு ஊழல்கள் உள்ளிட்ட பல உயர்மட்ட வழக்குகளை வெற்றிகரமாக கையாண்டார். மேலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்திய இவர், தொழிலாளர் கட்சியின் அரசியல் வாதிகளுக்கும் எதிரான குற்றச் சாட்டுக்களை முன்வைத்தார்.
2011 ஆம் ஆண்டில் கறுப்பினத்தவர் ஒருவர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் ஏற்பட்டது. வடக்கு அயர்லாந்திலும் ஏற்பட்ட இதேபோல் ஒரு பிரச்சனை ஏற்பட்டு கலவரத்தைத் தூண்டியது. இதை எல்லாம் சுமுகமாக சமாளித்து, பிரிட்டனில் அமைதியை நிலைநாட்டிய பெருமை கெயர் ஸ்டாமருக்கு உண்டு.
ஐந்து வெவ்வேறு பிரதமர்களின் கீழ் 14 ஆண்டுகள் குழப்பமான ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் மீண்டும் கூறிய கெயர் ஸ்டாமர், கன்சர்வேடிவ் அரசு விட்டுச்சென்ற பிரச்சினைகளை தீர்க்க, nation first என்ற அடிப்படையில் “முதலில் நாடு , பிறகு கட்சி ” என்று பிரச்சாரம் செய்தார்.
16 வயதில் கட்சியில் சேர்ந்து, பல எதிர்ப்புகளுக்கிடையே மெல்ல மெல்ல முன்னேறி , 2020 ஆம் ஆண்டு, தொழிலாளர் கட்சியின் தலைவரானார். 14 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருந்த தொழிலாளர் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக மாற்றிக் காட்டி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் கெயர் ஸ்டாமர்.