எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் இந்திய முதலீடு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏன் இந்த திடீர் முடிவை எலான் மஸ்க் எடுத்திருக்கிறார்? கடைசி நேரத்தில் இந்த திட்டம் கைவிடப்பட்டதற்கு என்ன காரணம் ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் உலகம் முழுவதும் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனராக, உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் இருக்கிறார். இந்தியாவிலும் டெஸ்லா நிறுவனத்துக்காக முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார். அது தொடர்பாக முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்தியாவுக்கு வந்து, நேரில் பிரதமர் மோடியைச் சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் டெஸ்லா நிறுவனத்தின் திட்டங்கள் குறித்து பேசவிருப்பதாக டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
வெளிநாட்டு EV எலெக்ட்ரிக் கார்கள் மீதான இறக்குமதி வரி மற்றும் அத்தகைய EV கார் உற்பத்தியாளர்களுக்கு அரசின் சலுகைகள் ஆகியவற்றைக் குறித்தும் பிரதமர் மோடியுடன் விவாதிக்க இருப்பதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம், தனது இந்தியப் பயணத் திட்டத்தைக் கடைசி நேரத்தில் ரத்து செய்தார்.
இந்தியப் பயணத்தை ரத்து செய்த எலான் மஸ்க் , யாரும் எதிர்பாராத வகையில் , சீனாவுக்குச் சென்று , சீன அதிபரைச் சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக, டெஸ்லா நிறுவனத்தின் இந்திய முதலீடுகள் சம்பந்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
இது தொடர்பான அறிக்கையை ப்ளூம் பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்க் இந்தியப் பயணத்தை ரத்து செய்ததிலிருந்து, அந்நிறுவனத்தின் சார்பாக உயர் அதிகாரிகள் யாரும் முதலீடு தொடர்பாக இந்திய அதிகாரிகளை அணுகவில்லை என்றும், மூலதனச் சிக்கலில் டெஸ்லா நிறுவனம் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, இந்தியாவில் புதிய முதலீடுகளைச் செய்வதற்கு திட்டமிடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் இருந்தே எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. சீனாவிலும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களால் அதிகப் போட்டிகளை எதிர்கொண்டு வருகிறது.
ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அரசு எடுத்த அதிரடி முடிவுகளால் டெஸ்லா நிறுவனம் கடும் நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து குறிப்பாக சீனாவிலிருந்து இறக்குமதியாகும் EV எலெக்ட்ரிக் கார்களுக்கான வரிகளை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பன்மடங்கு அதிகரித்துவிட்டன.
கடந்த சில மாதங்களுக்கு முன், தனது டெஸ்லா நிறுவனத்தில், அதிகமான அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எலான் மஸ்க் எடுத்திருந்தார். டெஸ்லாவின் சைபர் டெர்க் போன்ற புதிய அறிமுக எலக்ட்ரிக் கார்களும் சந்தையில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியவில்லை. மெக்சிக்கோவில் உருவாகும் டெஸ்லாவின் புதிய ஆலை கட்டுமானப் பணிகளும் தாமதமாகி கொண்டிருக்கிறது. இந்த காரணங்களால் தான், தனது இந்திய முதலீட்டு திட்டத்தை எலான் மஸ்க் நிறுத்தி வைத்திக்கிறார் என்று தெரிய வருகிறது.
இந்த சூழலில், மீண்டும் டெஸ்லா நிறுவனர், இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பினால், புதிய இறக்குமதி வரிக் கொள்கையின் கீழ் அனுமதி அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஏற்கெனவே, இந்தியாவின் EV மின்சார வாகனச் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக டாடா,மகேந்திரா, ஓலா உள்ளிட்ட பல நிறுவனங்கள் EV உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. MADE IN INDIA திட்டத்தின் கீழ், பிரதமர் மோடி உள்நாட்டு எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்திக்கு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த வாரம், இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் IPO வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது., அதன்படி, முதன்மை வெளியீடாக 5,500 கோடி ரூபாயும் மற்றும் இரண்டாம் நிலையாக 1,750 கோடி ரூபாயும் சந்தையில் இருந்து பெற அனுமதி பெற்றுள்ளது. இந்த ஒப்புதல் பெற்ற முதல் EV ஸ்டார்ட்அப் நிறுவனம் என்ற பெருமையை ஓலா EV எலக்ட்ரிக் நிறுவனம் பெறுகிறது.
இந்திய சந்தையில் இருந்து டெஸ்லா பின்வாங்குவது அவர்களுக்கு நஷ்டமே தவிர இந்தியாவிற்கு அல்ல என்று ஓலா நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பவிஷ் அகர்வால் தெரிவித்திருக்கிறார். தனது எக்ஸ் பதிவில், இது டெஸ்லாவின் இழப்பு, இந்தியாவின் இழப்பு அல்ல. டெஸ்லா இன்னும் சில வருடங்களில் இந்தியாவுக்கு வர நினைக்கும் போது, அது சாத்தியமற்றதாக இருக்கும் என்றும் பதிவிட்டிருக்கிறார்.