இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணையை வரும் 18-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மறுதேர்வு நடத்தக் கோரி 30-க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நீட் தேர்வு முடிவுகளின் தரவை வைத்து சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில், அசாதாரண சூழல் ஏதுமில்லை என தெரிவித்துள்ளது.
நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வுகள் முகமை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், மதிப்பெண் வழங்கப்பட்டதில் வழக்கமான நடைமுறைதான் பின்பற்றப்பட்டதாகவும், மிகப்பெரிய முறைகேடு ஏதும் அரங்கேறவில்லை என்றும் கூறியிருந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசும், தேசிய தேர்வுகள் முகமையும் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் நகலை மனுதாரர்களுக்கு அளிக்க வேண்டும் என்று கூறி, அடுத்தகட்ட விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.