பொதுத்தேர்வில் சாதனை படைத்த தனியார் பள்ளிகளுக்கு அரசு செலவில் பாராட்டு விழாவா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்து 949 தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படவிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ள அவர், தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது சாதனையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு சலுகை காட்டும் நோக்கத்துடன் இந்த பாராட்டு விழா நடத்தப் படுவதாக குற்றம் சாட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கான பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே அழைக்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார்.
தனியார் பள்ளிகளில் அனைத்து வசதிகளுடனும் படிக்கும் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது சாதனையா? அல்லது அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும் தள்ளாடும் அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெறுவது சாதனையா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், மாணவர்களுக்கு தரமான கல்வியை இலவசமாக வழங்க அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள பாராட்டு விழாவை ரத்து செய்து விட்டு, 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பாராட்டு விழா நடத்தி, அவர்களுக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.