புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உத்தரவிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் 1974-ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.
தற்போது 71 வயதாகியுள்ள அனுஷ்மான் கெய்க்வாட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருகிறார். இந்நிலையில் அவரின் மருத்துவ செலவுக்கு நிதியுதவி வழங்க பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு தன்னுடைய ஓய்வூதிய தொகையை வழங்குவதாக அறிவித்தார். அதேபோல் மற்ற வீரர்களும் அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு உதவ முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு உடனடியாக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உத்தரவிட்டுள்ளார்.