காவிரி நீரைப் பெறுவதற்காக கர்நாடக காங்கிரஸ் அரசிற்கு அழுத்தம் தர தமிழக அரசு பயப்படுவது ஏன் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை பூங்கா நகர் பகுதியில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியபின் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர்,
காமராஜருக்கு அஞ்சலி செலுத்துகின்ற, வணக்கம் செலுத்துகின்ற உரிமை ஒரு கட்சிக்கு இருக்கிறது என்றால் அது பாஜக மட்டும் தான். வளர்ச்சிக்கும் ஊழல் இல்லா ஆட்சிக்கு குறியீடு என்றால் காமராஜ் தான்.. தற்போது அவர் வழியில் தான் மத்திய ஆட்சி நடைபெறுகிறது.
தமிழக முதல்வர் முதல் பக்க விளம்பரத்தோடு ஒரு திட்டத்தை துவங்கி வைத்திருக்கிறார்கள், உலகத்திலேயே முதல் முறை என்று சொல்கிறார்கள்.
உணவோடு கல்வியை கொடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர்தான், ஆக அவருடைய பிறந்தநாளை ஒட்டி என்று போட்டியிருக்கலாம் ஏனென்றால் அவர் தான் உணவோடு கல்வியை கொடுத்தவர்.
அதுமட்டுமில்லாமல் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்வி கொள்கையில் காலை உணவோடு கல்வி என்ற ஒன்று உள்ளது. எனவே மத்திய அரசு திட்டத்தை எடுத்து நாங்கள் கொண்டு வந்தது போல முன்னிறுத்திக் கொள்வது தமிழக அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது.. அதை தான் இப்போது செய்துகொண்டிருக்கிறார்கள்.. எது எப்படி என்றாலும் குழந்தைகளுக்கு உணவளிப்பது மகிழ்ச்சி தான்..
விக்கிரவாண்டியில் அவர்கள் பெற்ற வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இது ஒரு தோல்விகரமான வெற்றி தான் என்னை பொறுத்தவரை.. வெற்றியை பெற்றுவிட்டு தமிழக அரசுக்கு நற்சான்றிதழ் என்று சொல்கிறார்கள், நல்லாட்சி எப்படி நடத்துவது என்பதில் கவனம் செலுத்துவதை விட தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது தான் கவனம் செலுத்துகிறார்கள்.
முதல்வர் அவர்கள் ஒரு கடிதம் ஒன்று எழுதுகிறார் அதில் விக்கிரவாண்டில் கிடைத்த வெற்றி நல்லாட்சியின் குறியீடு என்று சொல்கிறார், அப்படியென்றால் கள்ளக்குறிச்சி மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை எந்த ஆட்சியின் குறியீடு என்று கேட்கிறேன்..? அது நல்லாட்சியின் குறியீடு என்றால், இது மோசமான ஆட்சியின் குறியீடு தானே..!
அதுமட்டுமில்லாமல் உண்மையை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.. என்கவுண்டர் என்பது முற்றிலுமாக தேவையற்றது, ஏற்கனவே சரணடைந்த வரை கொலை செய்திருக்கிறார்கள் அங்கேயே உண்மையும் கொலை செய்யப்பட்டு விட்டது.. மேலும் போலீசார் அவசர அவசரமாக இந்த காணொளியை ஏன் வெளியிட்டார்கள் என்பது வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது..
இவ்வளவு ஆள் நடமாட்டம் உள்ள இடங்களில் கொலைகாரர்கள் வந்து கொலை செய்கிறார்கள் என்றால் இந்த துணிச்சலை யார் கொடுத்தது, இந்த இடத்தில் என்ன செய்தாலும் நம்மை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையை அரசாங்கம் கொடுத்துள்ளது தான் காரணமாக இருக்கமுடியும்..? படு பயங்கரமான ஒரு சூழ்நிலை தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. விக்கிரவாண்டி தேர்தலை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை..
உரிமைகளை நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் உரிமைகளை பாதுகாக்கிறோம் என்று சொல்கிற ஸ்டாலின் இப்போது என்ன சொல்கிறார் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது.
கூட்டணி ஆட்சி நடந்தால் நாங்கள் எல்லா உரிமையும் பெற்று தருவோம் என்று சொன்னவர்.. காவிரி உரிமையை நீங்கள் பெற்றுத் தரவில்லையே… எதிர்க்கட்சியாக இருக்கும் போது எவ்வளவு பேசினீர்கள். இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்பது தான் எங்களது கேள்வி.. காவிரி உரிமை பெற்று தர வேண்டும் என அழுத்தமாக அவர்களுக்கு கேட்பதில் ஏன் பயப்படுகிறார்கள்..?
பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி? படிக்க வேண்டும் என்று சொன்ன ஆட்சியை குடிக்க வேண்டும் என்று ஒப்பிட்டுக் கொள்வது என்ன ஆட்சி..
கிராமப்புற மாணவர்களுக்கு நீட் சரியில்லை என்று சொல்கிறார்கள் ஆனால் இரண்டு லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருக்கின்றனர், கிராமப்புற மாணவர்கள் பலன் பெற்று கொண்டிருக்கிறார்கள்.
நீட் வருவதற்கு முன்பாக எத்தனை அரசாங்க பள்ளி மாணவர்கள் பயன் பெற்று இருக்கிறார்கள், நீட் வந்ததற்கு பிறகு எத்தனை பேர் பயன்பெற்று இருக்கிறார்கள் என்ற விவரத்தை ஸ்டாலின் வெளியிடட்டும். வெறுமனே நீட் வேண்டாம் என்று சொல்வது மாணவர்களை திசை திருப்புவதாக இருக்கிறது எனக் கூறினார்.