அஸ்ஸாம் மாநிலம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டார்.
அஸ்ஸாமில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 109 பேர் உயிரிழந்தனர். திப்ருகர், கோலகாட், காம்ருப் உள்ளிட்ட மாவட்டங்களில், 5 லட்சத்து 97 ஆயிரம் பேர் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெள்ள பாதிப்பை மேற்கொள்ள அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.
இதேபோல மழையால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத், உத்தர பிரதேச முதல்வர்களையும் அமித் ஷா தொடர்புகொண்டு நிலவரத்தைக் கேட்டறிந்தார்.