தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான டி.கே. சிவகுமார் கடந்த 2013 முதல் 2018-ஆம் ஆண்டுவரை மாநில அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்குப் அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிவகுமார் மீது சிபிஐ கடந்த 2020-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இதை எதிர்த்து அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி, எஸ்.சி.சர்மா ஆகியோர், டி.கே. சிவகுமார் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.