தமிழகத்தில் கடந்த 200 நாட்களில் 595 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், தமிழக மக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழலில் வாழ்ந்து வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 200 நாட்களில் 595 கொலைச்சம்பவங்கள் அரங்கேறி மொத்த மாநிலமே கொலைக்களமாக மாறியுள்ளதாகக் கூறியுள்ளார்.
தலைநகர் சென்னை 86 கொலைகளுடன் முதலிடத்தை பிடித்து கொலை நகரமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 40 கொலைகளுடன் மதுரை 2-வது இடத்திலும், 35 கொலைகளுடன் தூத்துக்குடி 3-வது இடத்திலும், விருதுநகர் 31 கொலைகளுடன் 4-வது இடத்தையும் பிடித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்தவர்கள் சொல்வதை ஏன் கேட்க வேண்டும் என்ற இறுமாப்போடு செயல்படாமல் மக்களை காப்பாற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, ஆட்சியாளர்கள் காவல்துறையை தங்களது சுயநலத்திற்காக பயன்படுத்தினால், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.