மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த சாத்தியமில்லை என தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் குத்தகைக் காலம் வரும் 2028ல் முடிவடைய உள்ளதால், அதற்கு முன்பாகவே பிபிடிசி நிறுவனம், தேயிலை தோட்ட தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்தது.
இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இதனையடுத்து மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டாம் என பிபிடிசி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்தி மற்றும் குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் தற்போது அமைந்துள்ள எஸ்டேட்டுகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டதையடுத்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் துணை இயக்குனர் சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அடிக்கடி புலம்பெயரக் கூடியவர்கள் என்றும், அவர்கள் மலையை சார்ந்து வாழக்கூடிய மக்கள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசு ஏற்று நடத்த சாத்தியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.