வங்கதேசத்தில் தியாகிகளின் வாரிசுகளுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த கடந்த 2018-ஆம் ஆண்டில் இடஒதுக்கீட்டை ஷேக் ஹசீனா அரசு ரத்து செய்தது.
இதை எதிர்த்து வங்கதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மாணவ அமைப்பினர் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த வங்கதேச உச்சநீதிமன்றம், தியாகிகளின் வாரிசுகளுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், 93 சதவீத காலியிடங்கள் தகுதியின் அடிப்படையில்தான் நிரப்பப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளது.