கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஊர்ந்து செல்ல முடியாமல் தவித்த 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
சிறுமுகை வனச்சரக பகுதியான பாலப்பட்டி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் ராஜநாகம் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பாம்பு பிடி வீரர்களுடன் அங்கு சென்ற வனத்துறையினர், இரண்டு மணி நேரம் போராடி ராஜநாகத்தை மீட்டனர்.
மேலும், 12 அடி நீளமுள்ள அந்த ராஜநாகத்தின் உடல் நிலை பற்றி ஆய்வு செய்தபோது, உணவு எதுவும் உட்கொள்ள முடியாமல் சோர்வான நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதன் காரணமாக, ராஜநாகம் எங்கும் முன்னேறி செல்ல முடியாமல் இருப்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் ராஜநாகத்தை அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.