ஈரானின் சபகர் துறைமுகம் மற்றும் மியான்மரின் சிட்வே துறைமுகத்தின் செயல்பாட்டு உரிமையை இந்தியா பெற்றுள்ள நிலையில், வங்கதேசத்தின் மோங்லா துறைமுக செயல்பாட்டு உரிமையையும் கைப்பற்றி உள்ளது. சீனாவிற்கு எதிரான போட்டியில் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.
தனது கடல்சார் பட்டுப்பாதை நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு சீனாவுக்கு இந்தியப் பெருங்கடல் பகுதி மிக முக்கியமானதாக உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள Gwadar குவாடார் முதல் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள Djibouti ஜிபூட்டி வரை, பல துறைமுகங்களில் கணிசமான முதலீடுகளை சீனா செய்து வருகிறது. குறைந்தது 17 இந்தியப் பெருங்கடல் துறைமுகங்களில் சீனா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அவற்றில் 13 துறைமுகங்களை நிர்மாணிப்பதில் நேரடியாக ஈடுபட்டுள்ளது.
மேலும், கொள்கலன் போக்குவரத்தின் அடிப்படையில் உலகின் முதல் 10 துறைமுகங்களில் இந்திய துறைமுகங்கள் ஒன்று கூட இதுவரை இடம் இடம்பெறவில்லை. ஆனால் சீனாவில் ஆறு துறைமுகங்கள் இந்த பட்டியலில் உள்ளன. இதில்,சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கி இருக்கிறது.
இந்தியப் பெருங்கடலின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள முக்கிய கடல்சார் இடங்களில் தனது செல்வாக்கை இந்தியா அதிகரித்து வருகிறது. மேலும் நாட்டின் கடல் எல்லைகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா தீவிரப் படுத்திருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக. வங்க தேசத்தின் மோங்லா துறைமுகத்தின் செயல்பாட்டு உரிமையை இந்தியா பெற்றுள்ளது என்றாலும், அதற்கான ஒப்பந்தத்தின் விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. மோங்லா துறைமுக ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், மோங்லா துறைமுகத்தில் உள்ள முனையத்தை இந்தியன் போர்ட் குளோபல் லிமிடெட் (IPGL) நிறுவனமே நிர்வகிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்க தேசத்தின் தென் மேற்கு பகுதியில் , வங்காள விரிகுடாவில் இருந்து மேலே போசூர் ஆறு மற்றும் மோங்லா நுல்லாவின் சங்கமத்தில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது. இந்தியா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து அனுப்புவதில் இந்த துறைமுகம் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இந்த துறைமுகத்தை கூடுதல் கொள்கலன் சரக்குகளை கையாளுவதற்கு ஏற்ப , இப்போது இந்தியா மேம்படுத்தி இருக்கிறது.
கடந்த மாதம் இந்தியன் போர்ட் குளோபல் லிமிடெட் (IPGL) நிறுவன பிரதிநிதிகள் குழு , மோங்லா துறைமுகத்தின் செயல்பாட்டு வசதிகளை மதிப்பீடு செய்து, மேம்படுத்தும் திட்ட முன்மொழிவை மோங்லா துறைமுக ஆணையத்திடம் வழங்கி இருந்தது.
இந்நிலையில், தெற்காசியாவில் பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் மோங்லா துறைமுகத்தை நிர்வகிக்கும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது.
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிற அண்டை நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்திற்கான முக்கிய இணைப்பாக இந்த துறைமுகம் செயல்படும் என்றும் மேம்படுத்தப்பட்ட துறைமுக உள்கட்டமைப்பு, சரக்குகளின் இயக்கத்தை எளிதாக்கும் என்றும், போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்து, பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க செய்யும் என்றும் கூறப்படுகிறது.
















