இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, பல்வேறு வர்த்தக அமைப்புகளை சேர்ந்தோரிடம் விளக்குவதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முதல் உள்நாட்டு உற்பத்தி வரை அனைத்து விதமான வகையிலும், நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் தொழிற்துறையினருக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் கடன் வசதிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன்.
மேலும், உலகளவில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழிற்துறையினர் ஆற்ற வேண்டிய பங்களிப்பு குறித்தும் அவர்களிடத்தில் பேசினேன். இந்த நிகழ்ச்சியில், ஆந்திர மாநில ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர், அனைத்து இந்திய மசாலா ஏற்றுமதி சங்கத்தினர், சுற்றுலாத் துறை சார்ந்த அமைப்பினர், வர்த்தக அமைப்பினர் மற்றும் ஆந்திர மாநில பாஜக-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.