மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்குமாறு சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில், மருத்துவமனை வளாகத்தில் மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவாக காட்சிப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனை நுழைவுவாயில், வெளியேறும் பகுதி, இருளான பகுதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்றும், அவசர நிலையை எதிர்கொள்ள நிர்வாக ஊழியர் மற்றும் பாதுகாவலருடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
மருத்துவமனை வளாகத்தைக் கண்காணிக்க நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பாதுகாவலர்கள் போதிய எண்ணிக்கையில் பணியமர்த்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய மத்திய சுகாதார அமைச்சகம்,
மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், அடையாள பேட்ஜ் எனப்படும் வில்லைகளை வழங்கலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளது.
மேலும், பணிநேரத்தில் மருத்துவப் பணியாளர்கள் தங்களது அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்றும், பார்வை நேரம் உள்பட எப்போதும் நோயாளியுடன் ஒன்று அல்லது இரண்டு பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.