தமிழகத்தில் ரயில்வே திட்டப் பணிகளுக்காக 2 ஆயிரத்து 749 ஹெக்டர் நிலம் தேவைப்படும் நிலையில், 807 ஹெக்டர் நிலம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 2024-25 பட்ஜெட்டில் கணிசமாக குறைக்கப்பட்டதால், தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மேலும், இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு 6 ஆயிரத்து 362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இது காங்கிரஸ் ஆட்சியின்போது ஒதுக்கப்பட்ட நிதியை விட 7 சதவிகிதம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் ரயில்வே திட்டப் பணிகளுக்காக 2 ஆயிரத்து 749 ஹெக்டர் நிலம் தேவைப்படும் நிலையில், 807 ஹெக்டர் நிலம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பதிலளித்துள்ளார். ஆகவே, நிலங்களை வழங்குவதற்கான அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டால், மத்திய அரசு இரண்டு மடங்கு முயற்சி செய்து மாநிலத்தில் ரயில்வே துறை சார்ந்த வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் எனவும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.