கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லாததை எண்ணி உச்சநீதிமன்றம் கவலைக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாவிட்டால் அரசியலமைப்பின் கீழ் சமத்துவம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினர்.
பெண் மருத்துவரின் மரணத்தை தற்கொலை என்று மருத்துவமனை நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கையில் கொலை என்று ஏன் பதிவு செய்யவில்லை என சாடினர்.
மருத்துவமனை இயக்குநர் எப்போது இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார் என வினவிய நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் தங்களது பணியை தொடருமாறு கேட்டுக்கொண்டனர்.
மருத்துவர்கள் மற்றும் பெண் மருத்துவர்களை பாதுகாப்பது என்பது தேசிய நலன் சார்ந்த விஷயம் எனக்கூறிய நீதிபதிகள், மருத்துவர்கள் பாதுகாப்பு தொடர்பாக தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்படும் என தெரிவித்தனர்.
அந்த குழுவில், உள்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள், தேசிய மருத்துவ ஆணைய தலைவர், தேசிய தேர்வாளர்கள் குழு தலைவர் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இடம்பெறுவார்கள் என நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும், கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நிலை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.