3 நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்த மலேசிய பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி குடியரசு மாளிகை வந்த அன்வர் இப்ராகிம்மை பிரதமர் மோடி கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் அன்வர் இப்ராஹிம் கையெழுத்திட்டார்.
இதனை அடுத்து டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து அவர் உரையாடினார்.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், மலேசியா பிரதமர் அன்வரும் இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் இருநாட்டு தரப்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இருநாட்டு பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விரிவான பேச்சுவார்த்தையை நடத்தியதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மலேசிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ ஒத்துழைப்பு வழங்கிய அன்வர் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். இந்தியா-மலேசியா இடையேயான நட்புறவு ஒரு தசாப்தத்தை நிறைவு செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கான முதலீடு 5 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், செமிகண்டக்டர், ஏஐ போன்ற புதிய தொழில்நுட்பத் துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, இந்தியாவின் UPI மற்றும் மலேசியாவின் பேனெட் பணப்பரிவர்த்தனையை இணைக்கும் பணியில் ஈடுபடுவோம் எனக் கூறினார்.