உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி காலமானார்.
நுரையீரல் தொற்று காரணமாக கடந்த மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சையும் நடைபெற்றது.
இந்த நிலையில், சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. தொடர்ந்து, யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் பிற்பகல் 3.05 மணிக்கு உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது. அவரது உடலை எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆய்வக பிரிவுக்கு ஆராய்ச்சி படிப்புக்காக ஒப்படைப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
72 வயதான சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக கடந்த 2015-இல் பொறுப்பேற்றார். தொடர்ந்து மூன்று முறை அக்கட்சியின் பொதுச் செயலராக அவர் தேர்வானார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட யெச்சூரி, சென்னையில் கடந்த 1952-இல் பிறந்தார்.
கடந்த 2005 முதல் 2017-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக சீதாராம் யெச்சூரி பொறுப்பு வகித்தார். சீதாராம் யெச்சூரிக்கு இந்திராணி மஜூம்தார், சீமா சிஸ்டி ஆகிய இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் அவரது மகன் ஆசிஸ் யெச்சூரி கொரோனா தொற்றால் கடந்த 2021-ஆம் ஆண்டில் தனது 34-ஆவது வயதில் உயிரிழந்தார்.
சீதாராம் யெச்சூரி மறைவைத் தொடர்ந்து டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கட்சிக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதேபோல நாடு முழுவதும் அக்கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.