உத்தரகாண்ட்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவு காரணமாக ஆன்மிக சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 30 பேர் இன்று சொந்த ஊர் திரும்புகின்றனர்.
கடலூரை சேர்ந்த 17 பெண்கள் உள்பட 30 பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷுக்கு கடந்த 1-ஆம் தேதி ஆன்மிக சுற்றுலா சென்றனர். இதனைத்தொடர்ந்து உத்தரகாண்ட்டில் உள்ள பல்வேறு ஆன்மிக தலங்களையும் பார்வையிட்டனர்.
இதற்கிடையே உத்தரகாண்ட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து 18 கி.மீ.தொலைவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் ஆதி கைலாஷுக்கும் செல்ல முடியாமல் சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் 30 பேரும் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் 30 பேரும் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் இன்று ஹெலிகாப்டர் மூலம் சொந்த ஊருக்கு அழைத்துவரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.