வெளிநாடு செல்லும் போதெல்லாம் , நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதையும் , தேச விரோத கருத்துகளை வெளியிடுவதையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாடிக்கையாக வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
காங்கிரஸ் கட்சித் தலைவரும்,மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி , கடந்த வாரம் 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா வடிவமைத்து தந்த நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடுவதும், வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகளைச் சந்திப்பதும், சிந்தனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைச் சந்திப்பதும் என்று அமெரிக்காவில் ராகுல் காந்தி கலந்து கொண்ட அனைத்து நிகழ்விலும், இந்தியா மீது வெறுப்பையே வெளிப்படுத்தியிருந்தார்.
வர்ஜீனியாவில் புலம் பெயர்ந்த இந்தியர்களுடனான நிகழ்வில் பேசிய ராகுல்காந்தி, இந்தியாவில் சீக்கியர்கள் தலைப்பாகை அணியவோ, குருத்வாராக்களுக்குச் செல்லவோ அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.
உடனடியாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தானி பயங்கரவாதக் குழுவான நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், உலகளாவிய காலிஸ்தான் வாக்கெடுப்பு பிரச்சாரத்தை ராகுல் காந்தி நியாயப்படுத்தியிருப்பதாக அறிக்கை வெளியிட்டார்.
முன்னதாக, ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் பேசிய ராகுல் காந்தி, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றியும், இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றியும் நியாயமற்ற கருத்துகளைத் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
மேலும், வாஷிங்டனில் உள்ள நேஷனல் பிரஸ் க்ளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஜனநாயகம் உடைந்து விட்டது என்று இந்தியா மீது வெறுப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
தொடர்ந்து, வாஷிங்டனில் உள்ள ரேபர்ன் ஹவுஸ் அலுவலகக் கட்டிடத்தில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ராகுல் காந்தி சந்தித்து உரையாடினார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராட்லி ஜேம்ஸ் ஷெர்மன் தொகுத்து வழங்கிய அந்தக் கூட்டத்தில், ஜொனாதன் ஜாக்சன், ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பார்பரா லீ, ஸ்ரீ தானேடர், , இல்ஹான் ஓமர், ஹாங்க் ஜான்சன் மற்றும் ஜான் ஷாகோவ்ஸ்கி உள்ளிட்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட இல்ஹான் ஓமரை ராகுல் காந்தி சந்தித்தது , இந்தியாவில் பெரும் அரசியல் சலலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிரான தீர்மானங்களை அறிமுகப்படுத்தியவரும், 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு எதிராக செயல்பட்டவரும், இந்தியாவின் இறையாண்மையை மீறி, பாகிஸ்தானின் நிதியுதவியுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்றவருமான இல்ஹான் ஓமர், இந்தியாவிற்கு எதிரான செயல்பாடுகளை கொண்டவராக கருதப்படுகிறார்.
இந்தியாவில் “இஸ்லாமிய வெறுப்பு” பற்றி விவாதிக்க இம்ரான் கான் உட்பட பிற நாட்டுத் தலைவர்களைச் சந்தித்தவரும் இந்துக்கள் மீது வெறுப்புணர்வை பரப்புவதில் தீவிரமாக பங்காற்றி வருபவரும் ஆன அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான இல்ஹான் ஓமரை ஏன் ராகுல் காந்தி சந்தித்தார் என்பது பல ஐயங்களை ஏற்படுத்தி உள்ளது.
எப்போதும் ராகுல் காந்தி தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக, வெளிநாட்டு மேடைகளில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பேசுவதாகவும் இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் செயல்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
ஒமர் உடனான காந்தியின் சந்திப்புக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாள்வியா, காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது என விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி, தனது கருத்துக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கூறியுள்ள உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத குழுவின் தலைவராக மாறிக் கொண்டிருக்கிறார் என்றும், தேசத்தின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை அழித்து, உள்நாட்டுப் போரை நோக்கி தள்ளுவதுதான் நோக்கமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தீவிரமான இந்திய தேச விரோதச் சக்திகளைச் சந்திப்பதும், இந்தியாவுக்கு எதிரான விஷக் கருத்துக்களைச் சொல்வதும் என்று ராகுல் காந்தி, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கிறார் என்றும் தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.