தமிழர்களின் வீர விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தற்காப்பு கலையான சிலம்பாட்டத்திற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் உரிய அங்கீகாரம் வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. தற்காப்புக் கலைகளுக்கு முன்னோடியாக திகழும் சிலம்பக் கலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
பண்டைய தமிழர்கள் வனவிலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்திப் போராட தொடங்கிய காலத்தில் முதலில் கையில் எடுத்த ஆயுதம் கம்பு என்பது வரலாறு. பிற்காலத்தில் அதுவே சிலம்பக்கலையாக மாறியது. திருக்குறள், கலிங்கத்துப்பரணி, திருவிளையாடல் புராணம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க கால நூல்களில் எல்லாம் சிலம்பம் என்ற பெயர் இடம்பெற்றிருக்கிறது.
தமிழர்களின் தற்காப்புக் கலைகளில் எண்ணற்ற கலைகள் இருந்தாலும் இன்றளவும் உயிர்ப்புடன் இருப்பது சிலம்பாட்டம் மட்டுமே. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வழிப்பறி, செயின் பறிப்பு என பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஏதேனும் ஒரு தற்காப்புக்கலையை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சிலம்ப பயிற்சிகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிகளவு பங்கேற்று சிலம்பக் கலையை கற்று வருகின்றனர். தான் கற்றிருக்கும் சிலம்பக் கலையையே தனக்கு பாதுகாப்பாக விளங்குவதாக கூறுகிறார் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு வரும் வீராங்கனை யுவஸ்ரீ.
தற்காப்பு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் சிலம்பத்தில் உள்ள அனைத்து விதமான கலைகளையும் கற்பதற்கான ஆர்வம் மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சிலம்பக் கலை பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கருவியாக இருப்பதோடு அவர்களுக்கான பாதுகாப்பு உணர்வையும் தந்திருக்கிறது.
அடிமுறை, தொடுமுறை, சுற்றுமுறை என பல்வேறு வகைகளில் கற்றுத்தரப்படும் சிலம்பத்தை கற்பதில் ஆர்வம் காட்டும் அதே நேரத்தில், காலை 6 மணி முதல் 8 மணி வரை சிலம்பம் விளையாடுவது உடலுக்கு சிறந்த பலனை கொடுக்கும் என பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று மாதங்களில் அடிப்படை சிலம்பக் கலையை கற்றுக் கொள்ளலாம் என்கிறார் பயிற்சியாளர் பொன் சதீஷ்
உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை ஆகியவற்றுக்கு உதவும் சிலம்பக் கலை தோன்றி ஐந்தாயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் அனைத்து தரப்பு மக்களாலும் தவிர்க்க முடியாத கலையாக விளங்கி வருகிறது. ஆண் ,பெண் என்ற வேறுபாடின்றி அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய அற்புதக் கலை தான் இந்த சிலம்பம்..