ஆம்பூர் அருகே இலங்கை தமிழர்களுக்காக கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டின் மேற்பூச்சு இடிந்த விழுந்ததால் அச்சமடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர்.
திருப்பத்தூர் மாவட்டம் மின்னூர் மற்றும் சின்னப்பள்ளிகுப்பம் பகுதியில் வசித்து வந்த இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு சார்பில் 12 புள்ளி 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டன.
சுமார் 236 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்காக குடியிருப்புகள் திறக்கப்பட்டன. கடந்த மாதம் 29-ஆம் தேதி அமைச்சர் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான் ஆகியோர் குடியிருப்புகளை திறந்து வைத்தனர்.
இதனையடுத்து, இலங்கைத் தமிழர்கள் வீடுகளில் வசிக்க தொடங்கிய நிலையில், வெறும் 15 நாட்களில், காந்தன்-விஜயா தம்பதியினரின் வீட்டின் மேற்பூச்சு திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி வீட்டை விட்டு வெளியேறினர். இதுபோல, பல வீடுகள் விரிசல் விழுந்தும், சேதமடைந்தும் காணப்படுவதால் அச்சத்துடன் வீடுகளில் வாழ்ந்து வருவதாக இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.