சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படுத்துறங்கிய ஆதரவற்ற நபர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர், தினமும் பணிக்கு சென்று விட்டு படுத்து உறங்குவது வழக்கம். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் இரவு படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஆதரவற்றோர், முதியோர், பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இதில் சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பேருந்து நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த உயர் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பேருந்து நிலையத்தில் உறங்க அனுமதி அளித்தபின் போராட்டம் கைவிடப்பட்டது.