ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றிருந்த நிலையில், இந்திய பெண்கள் அணியும் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அபிஜித் குண்டே தலைமையில் கலந்து கொண்ட இந்திய அணி வீராங்கனைகள், தங்களது சிறப்பான செயல்பாடு மற்றும் அறிவார்ந்த திறன் மூலம் இந்த வெற்றி பெற்றுள்ளார்கள்.
தமிழக வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபு உள்ளடங்கிய இந்திய அணியின், ஹரிகா துரோணவள்ளி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் மற்றும் தானியா சச்தேவ் ஆகியோர் ஒன்றிணைந்து பெற்றுள்ள இந்த தங்கப் பதக்கமானது, இந்திய மக்கள் அனைவருக்கும் மகிழ்வையும் பெருமையையும் கொடுத்துள்ளது. அனைவருக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.