நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆறுதல் கூறினார்.
பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் வசித்து வரும் சுந்தர் என்பவரின் மகன் ஆன்மீக சமூக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு தியாகராஜ நகரில் உள்ள தெரு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை தடுத்து நிறுத்தி, அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து எறிந்துள்ளனர். மேலும், இதுபோல பூணூல் அணிந்து வரக்கூடாது என்று மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாநகராட்சி பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமிற்காக வருகை தந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், பாதிக்கப்பட்ட இளைஞரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நெல்லையில், பிராமண சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்டதுதான் திராவிட மாடல் ஆட்சியா என கேள்வி எழுப்பினார். பூணூல் அறுப்பு விவகாரத்தில் கள்ள மவுனம் காக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். த
தமிழகத்தில் அரை நூற்றாண்டிற்கு மேலாக திராவிடத்தின் பெயரால் மத நம்பிக்கை, இந்துக்களுக்கு எதிராக ஓர் மக்கள் விரோத கும்பல் தொடர்ச்சியாக பிரசாரம் மேற்கொண்டு வருவதாக சாடியுள்ளார். மேலும், இத்தகைய சமூக விரோத செயலை செய்த நபர்களை உடனடியாக கண்டுபிடித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து சடத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.