ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதியளித்த பின்னரும் அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6 ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், அணி வகுப்புக்கு அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அளித்த மனுக்களை பரிசீலித்து வருவதாகவும், 29ம் தேதிக்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என்றார்.
ஆர் எஸ் எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விதிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னரும் அணி வகுப்புக்கு நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒவ்வொரு வருடமும் ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்புக்கு அனுமதி கோரி வழக்கு தொடரப்படுகிறது.விதிமுறைகள் எல்லாம் வகுக்கப்பட்ட பின்னரும் அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பிய நீதிபதி விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதற்கு முன்பாக, அனுமதிகோரிய விண்ணப்பங்கள் மீது பரிசீலித்து எடுத்த முடிவுகள் தொடர்பாக அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை தள்ளி வைத்தார்.