இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து சிந்திப்பதாக பேசிய ராகுல் காந்தியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்திற்கு சென்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து சிந்திக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கரு.நாகராஜன் கூறியதாவது :
“இட ஒதுக்கீடு குறித்து ராகுல்காந்தி பேசியதுமன உளச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் ,பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் சமுதாயம் மட்டும் பழங்குடி மக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
என்னை போன்ற சமுதாய ரீதியாக பின்தங்கியுள்ள மக்களிடையே குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியதோடு சமுதாய அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் பேச்சை கண்டிக்கும் வகையில் வரும் 30ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய ஆர்பாட்டம் பாஜக எஸ்சி பிரிவின் சார்பாக நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னை மட்டுமின்றி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து ராகுல் காந்தி மீது சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையரையும் நேரில் சந்தித்து அவரிடம் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் கரு.நாகராஜன் தெரிவித்தார்