ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடர்பாக அனுமதி கோரிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6 ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், கடந்த ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் இது போல் அனுமதி கேட்கும் போதெல்லாம் தமிழக காவல்துறை அனுமதி மறுப்பதாகவும், நேற்று இரவு அனுமதி கோரிய மனுவை காவல்துறை நிராகரித்துள்ளதாகவும் அவர் வாதிட்டார்.
எத்தனை பேர் பங்கேற்பார்கள், யார் நடத்துகிறார்கள் என்ற விவரங்கள் இல்லை என காரணங்களை கூறி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அனுமதி வழங்க கூடாது என்பதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்றும், கடந்த முறை தமிழகத்தில் 43 இடங்களில் ஊர்வலம் நடத்தப்பட்டதாகவும், இந்த முறை 58 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவில் விதித்த நிபந்தனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், தொடங்கும் முடிவடையும் இடம், யார் பொறுப்பு போன்ற தகவல் ஆர்.எஸ். எஸ் ஊர்வலம் அனுமதி கோரிய மனுவில் இல்லை என்றும் இதனால் பாதுகாப்பு வழங்குவதில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து மாநிலங்களிலும் ஆர்.எஸ். எஸ் ஊர்வலம் நடத்தப்படுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே அனுமதி ஒவ்வொரு வருடமும் அனுமதி மறுக்கப்படுகிறது என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
கூடுதல் விவரங்கள் வேண்டும் என்றால் அனுமதி கோரி மனு அளித்தவரிடமே அந்த தகவல்களை காவல்துறை பெற்றுக் கொள்ளாலேமே என கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெயச்சந்திரன், மனுவில் தகவல்கள் இல்லை என்றால் மனு அளித்த நபரை வரவழைத்து என்ன பிரச்சனக்கள் உள்ளது என்பதை ஏன் காவல்துறை விளக்கவில்லை என்றும் வினவினார்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடர்பாக அனுமதி கோரிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி,விசாரணையை வரும் 30 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.