அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக ஆசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 100க்கு 39.1 மதிப்பெண்களுடன் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடியூட், இந்த ஆண்டுக்கான ‘ஆசியா பவர் இன்டெக்ஸ்’ (API) என்னும் ஆசிய ஆற்றல் குறியீட்டு பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியா மற்றும் பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகளவில் சீனா தனது ஆக்கிரமிப்பை வெளிப்படுத்திவரும் நேரத்தில் இந்த ஆற்றல் குறியீட்டு பட்டியல் வெளியாகி உள்ளது.
சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் மேலாதிக்க செயல் திட்டங்களை எதிர்கொள்ள இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் போன்ற பல அமைப்புக்களின் கீழ் ஓரணியாக நிற்கின்றன.
ஆசிய நாடுகளில் சீனா, அமெரிக்காவை விட வலிமையான ராணுவத்தைக் கொண்டிருக்கிறது.
ஏறக்குறைய அனைத்து தெற்காசிய நாடுகளுடனும் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.
இந்தியாவுடன் அதிக ராணுவ பதற்றங்களை ஏற்படுத்தி வரும் சீனா மீது நம்பிக்கை இழந்த தெற்காசிய நாடுகளுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேணி வருகிறது. ஏற்கனவே, தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அமெரிக்காவின் பாரம்பரிய நட்பு நாடுகளாக உள்ளன. மேலும், ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட AUKUS போன்ற புதிய கூட்டணிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதில் குவாட் ஒரு முக்கிய மையமாகவும் மாறியுள்ளது. 2024ம் ஆண்டில், அமெரிக்க -ஜப்பான் புதிய அளவிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், ஆஸ்திரேலியா-அமெரிக்க கூட்டணி தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அமெரிக்க அரசு, தென் கொரியாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கூடவே, பிலிப்பைன்ஸுடன், புதிய அரசு தரப்பு உறவை அமெரிக்கா, திறம்பட நிர்வகித்து வருகிறது.
ஆசியாவில் ஜப்பானை முந்தி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், மலாக்கா ஜலசந்தியின் கிழக்கே தன் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் இந்தியாவின் ஆற்றல் ஆச்சரியப்பட வைப்பதாக இந்த ‘ஆசியா பவர் இன்டெக்ஸ்’ பட்டியல் குறிப்பிட்டுள்ளது. ஒரு பெரிய சக்தியாக மேலும் வளர்ச்சியடைவதற்கான போதுமான ஆற்றலையும் இந்தியா கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வலுவாக வளர்ந்து வரும் இந்தியா, தெற்காசியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தன் இராஜதந்திர செல்வாக்கை அதிகரித்துள்ளது என்றும் ஆசியா பவர் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் புத்திசாலித்தனமான இராஜதந்திரங்கள் மற்றும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் இடத்தை மாற்றியமைப்பதற்கான பிரதமரின் துணிச்சலான லட்சியங்களின் நேரடி விளைவாகவே, சக்தி மிக்க நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது.
இந்தியாவின் எழுச்சி தற்செயலானது அல்ல என்றும், உலக வல்லரசு அந்தஸ்துக்கு தேசத்தைப் பிரதமர் மோடி உயர்த்தியிருக்கிறார் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியிருக்கிறார்.
2027ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக ஆசியாவின் மூன்றாவது சக்தி மிக்க நாடாக இந்தியா நிமிர்ந்து நிற்கிறது.