பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக ஐ.நா. பொது அவையில் இந்திய செயலர் பாவிகா மங்களாநந்தன் குற்றம் சாட்டினார்.
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ கடந்த 2019-ஆம் ஆண்டில் மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இந்தியா அதன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலளித்து ஐ.நா. பொது அவையில் இந்திய செயலர் பாவிகா மங்களாநந்தன் பேசினார். அப்போது உலகளவில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை பரப்புவதாகவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அந்நாடு தனது கொள்கையாகவே வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்தால், தவிர்க்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாவிகா மங்களாநந்தன் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.