தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா (Swachh) திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி டெல்லியில் உள்ள விக்யான் பவன் வளாகத்தை பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருடன் சேர்ந்து, பிரதமர் மோடி தூய்மைப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து விக்யான் பவனில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தொடர் முயற்சியால் மட்டுமே நமது இந்தியாவை தூய்மையாக மாற்ற முடியும் என்றும், ஸ்வச் பாரத் இயக்கத்தின் வெற்றி, நமது ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சியின் விளைவு எனவும் தெரிவித்தார்.
அம்ருத் திட்டத்தில் நாட்டின் பல்வேறு நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும் என்றும், ஸ்வச் பாரத் திட்டத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வேன் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
தூய்மை இந்தியா திட்டம் மூலம் ஆண்டுதோறும் 70 ஆயிரம் குழந்தைகளின் உயிர்கள் காக்கப்படுவதாகவும், இந்த நூற்றாண்டில் உலகின் மிகப்பெரிய வெற்றிகரமான மக்கள் பங்கேற்பு இயக்கம் தூய்மை இந்தியா திட்டம் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.