நெல்லை மாவட்டத்தில் மலை கிராம மக்கள் தாமிரபரணி ஆற்றை கடக்க 40 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மரப்பாலத்திற்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்..
திருநெல்வேலி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது சின்ன மயிலாறு கிராமம். பாபநாசம் அணையின் அடிவாரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு காணி பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
சின்ன மயிலாறு கிராமத்தை சேர்ந்த மக்கள், மலைப்பகுதியில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லும் வழியில் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடுகிறது. இந்த
ஆற்றை கடந்து செல்ல முறையான பாலங்கள் எதுவும் இதுவரை அமைத்து தரப்படவில்லை. சாதாரண மரப்பாலம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இந்த மரப்பாலமும் கூட அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்து விட்டது.
கடுமையான மழை, சூறைக்காற்று, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்களின்போதும், இந்த மரப்பாலத்தை பயன்படுத்திதான் சின்ன மயிலாறு கிராம மக்கள் ஆற்றை கடந்து வருகின்றனர். ஆனால், மரப்பாலம் 40 ஆண்டுகளை கடந்து விட்டதால் தற்போது மிகவும் பலவீனமடைந்துள்ளது. இனியும் இந்த மாரப்பாலத்தை பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்காது என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
சின்ன மயிலாறு கிராம மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல ஏதுவாக ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் ஆற்றின் குறுக்கே, கான்கிரிட் பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மழைக்காலம் தொடங்குவதற்குள் கான்கிரீட் பாலத்தை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கும் மலைக் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் அச்சமின்றி ஆற்றை கடக்க கான்கிரீட் பாலம் உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்…..