பிரான்ஸ் நாட்டின் ராணுவ தொழில்நுட்ப நிறுவனமான சஃப்ரான், பிரான்சுக்கு வெளியே, இந்தியாவில் தனது முதல் ராணுவ பாதுகாப்பு மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் பிரிவை அமைக்க உள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இரண்டு நாள் அரசு பயணமாக, பிரான்ஸ் சென்றிருந்த, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனைச் சந்தித்தார். இராணுவ செயற்கைக்கோள்களை ஏவுவது மற்றும் ஹேமர் ஏவுகணை போன்ற ஸ்டாண்ட்-ஆஃப் ஆயுதங்களை இணைத்து உருவாக்குவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
மேலும், பிரான்ஸ் ராணுவ அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் மற்றும் பாதுகாப்பு கொள்முதல் முகமையின் இயக்குநர் இம்மானுவேல் உள்ளிட்டோரைச் சந்தித்த உரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, ராணுவம் மற்றும் சிவில் என்ஜின்களின் முக்கியமான பாகங்களைத் தயாரிப்பதில் மேம்பட்ட பொருட்கள் மற்றும் உலோகம் ஆகியவற்றில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற பிரான்ஸ் ஒப்புக்கொண்டது.
இது பல்வேறு ஆயுத அமைப்புகளின் வளர்ச்சியில் முக்கியமானதாக கருதப் படுகிறது. இதன் மூலம், டைட்டானியம் உலோகக்கலவைகள் மற்றும் நிக்கல் அடிப்படையிலான சூப்பர்அலாய்கள் போன்ற வலுவான, ஆனால் இலகுரக பொருட்களை பிரான்ஸ் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான நீருக்கடியில் பயணிக்கும் ட்ரோன்கள் மற்றும் வான்வழி அமைப்புகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும், பிரான்சும் ஒப்புக் கொண்டுள்ளன.
இரு நாடுகளும் எதிர் திரள் ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களின் வளர்ச்சி ஆகியவற்றிலும், சைபர் பாதுகாப்பு மற்றும் விண்வெளியில் ராணுவ பயன்பாடுகள் உள்ளிட்ட முக்கியமான பாதுகாப்பு விஷயங்களிலும் ஒத்துழைக்கும் என்று கூறப் பட்டுள்ளது.
முக்கியமான பாதுகாப்புத் துறைகளில் இந்தியா தனது உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு, இந்த அறிவுப் பரிமாற்றம் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரான்ஸின் முன்னணி ராணுவ தொழில்நுட்ப நிறுவனமான Safran, இந்தியாவில் பாதுகாப்பு மின்னணு சாதனங்கள் உற்பத்தி வசதியை ஏற்படுத்த ஆர்வமாக இருப்பதாகவும், சென்சார்கள் மற்றும் பல்வேறு ராணுவ தளங்களை ஆதரிப்பதற்கு முக்கியமான மின்னணு கூறுகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளது.
ராணுவ மின்னணு வசதியை அமைப்பதற்கான சஃப்ரானின் முடிவு, இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த உற்பத்தி ஆலை சென்சார்கள் மற்றும் ராணுவ பயன்பாடுகளுக்குத் தேவையான மின்னணு பாகங்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Safran, இந்தியாவின் எந்த பகுதியில் இந்த உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது என்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை என்று கூறப் பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உடன் இணைந்து, ஹெலிகாப்டர் என்ஜின்களின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி, விற்பனை ஆகியவற்றில், சஃப்ரான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
மேலும், கடந்த ஆண்டு, Safran-ன் துணை நிறுவனமான Safran Aircraft Engines Services India என்ற நிறுவனம், ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தின் துணை நிறுவனத்துடன் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் ஆகிய பணிகளுக்கான நில குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.
மற்றொரு பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன், ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் சிவிலியன் விமானங்களுக்கான முழு அளவிலான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைக்கும் வசதியை உருவாக்க உத்தரபிரதேசத்தின் ஜெவாரில் ஏற்கனவே நில குத்தகை எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மையப் புள்ளியாக இருக்கும் இந்திய பசிபிக் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவதில், இந்தியாவின் முயற்சிக்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இப்போது, எதிர்கால பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளில் இந்தியாவுடன் பிரான்ஸ் இணைந்திருப்பது ஒரு நல்ல தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.