தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மகிழ் முற்றம் உருவாக்க பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், கற்றல் திறன் மேம்பாடு, மாணவர்கள் விடுப்பு எடுப்பதை குறைப்பது, ஒற்றுமை கல்வியை ஊக்குவித்தல் மற்றும் ஆசிரியர்- மாணவர்கள் உறவை மேம்படுத்துதல் உள்ளிட்டவை இந்த திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மகிழ் முற்றம் அமைப்பு, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாணவர் குழு அமைப்பை வழி நடத்த வேண்டும் எனவும், இக்குழுவில் மாணவர்களில் இருவர் குழு தலைவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசின் வலைதளமான எமிஸ் தளத்தில் மாணவர் அமைப்புகளின் செயல்பாடுகளை உள்ளீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு உள்ளீடு செய்யப்படும் மாணவக் குழுக்கள் பெறும் புள்ளிகள் வகுப்பின் கரும்பலகையிலும் வலைதளத்திலும் உள்ளீடு செய்ய வேண்டும் எனவும் அந்த புள்ளிகள் அடிப்படையில் வெற்றிக் குழுக்கள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் அடங்கிய வழிகாட்டுதல் குழு, மாவட்டம் தோறும் உருவாக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகிழ் முற்றம் மாணவர் குழு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு உரிய வழிகாட்டுதல்களை மாணவர் குழுவுக்கு வழங்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குநரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது