மீனவ மக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை பட்டினம்பாக்கத்தில் கட்டப்பட்ட மீன் அங்காடி, திறக்கப்பட்டு 50 நாட்களை கடந்தும் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது. நவீன மீன் அங்காடி பற்றியும், அதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடக்கூடிய இடங்களில் ஒன்று பட்டினம்பாக்கம் மீன்சந்தை. சாலையின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டிருந்த மீன் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், அது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. அவ்வழக்கு விசாரணையின் போது போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை முழுவதுமாக அகற்றுவதோடு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி சென்னை பட்டினம்பாக்கத்தில் 14.93 கோடி ரூபாய் மதிப்பில் 360 கடைகளுடன் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு 50 நாட்களை கடந்தும் தற்போது வரை மீனவர்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது.
சாலைகளில் நடைபெறும் மீன் விற்பனை, மீன் அங்காடிக்குள் இருக்காது எனவும், தற்போது திறக்கப்பட்டுள்ள மீன் அங்காடியில் போதுமான இடவசதி இல்லை எனவும் மீன் விற்பனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக மீன் அங்காடிக்குள் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதிலும் முறைகேடு நடந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு விருப்பமில்லாத மீன் அங்காடிக்குள் செல்லுமாறு கட்டாயப்படுத்தினால் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ள மீன் விற்பனையாளர்கள், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் மீன் விற்பனைக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்