மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த 60 வயது முதியவர் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்த நிலையில், வெயிலின் தாக்கத்தாலும், கூட்ட நெரிசலால் ஏற்பட்ட மூச்சுத் திணறலாலும் முதியவர்கள், பெண்கள் என சுமார் 14 பேர் மயங்கி விழுந்துள்ளனர்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட 4 பேரில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதவிற 9 பேர் நீர்சத்து குறைபாடு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.