இலங்கைக்கு வழங்கப்பட்ட 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன்களை மானியமாக மாற்றவும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்தை 61.5 மில்லியன் டாலருக்கு நவீனமயமாக்கவும் இந்தியா முன்வந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அண்மையில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவரான அநுரகுமார திஸ்நாயக இலங்கை அதிபராக கடந்த மாதம் 23 ஆம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில், அநுரகுமார திஸ்நாயக இலங்கை அதிபராக பதவியேற்ற, 15 நாட்களுக்குள் முதல் வெளிநாட்டு பிரமுகராக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவரைச் சந்தித்துள்ளார். இருதரப்பு உறவை மேம்படுத்துவதை மையமாக கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், மீன்பிடி, பாதுகாப்பு, சுற்றுலா, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் கலந்துரையாடியதாக இலங்கை அதிபரும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கேசன் துறைமுகத்தை நவீனமயமாக்கும் வகையில் 61.5 மில்லியன் அமெரிக்க டாலர் மானியம் வழங்க இந்தியா முன்வந்துள்ளது என்றும், ஏற்கெனவே இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள 7 கடன்களை மானியமாக மாற்ற இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை ரயில்வே துறைக்கு 22 டீசல் இன்ஜின்களைப் பரிசாக கொடுக்கவும் இந்தியா முடிவு செய்திருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து சுமார் 104 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்கேசன் துறைமுகம், சுனாமியாலும், ‘நிஷா’ சூறாவளியாலும் கடுமையாக சேதமடைந்தது.
காங்கேசன் துறைமுகத்தை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. நீண்ட காலமாகவே, இலங்கை துறைமுகங்களை சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் பயன்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக, இந்தியா, இலங்கையிடம் கேள்வி எழுப்பியது. இதன் விளைவாக, முந்தைய ரணில் விக்கிரமசிங்கே அரசு, நாட்டின் துறைமுகங்களை அனைத்து நாடுகளின் ஆராய்ச்சிக் கப்பல்கள் பயன்படுத்துவதற்கு ஓராண்டு தடை விதித்தது. இந்த தடை, வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
தேசிய பாதுகாப்பு குறித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி உள்ளார். அதே நேரத்தில், 50 தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், எரிசக்தி உற்பத்தி மற்றும் பரிமாற்றம், எரிபொருள் மற்றும் எல்என்ஜி விநியோகம், சூரிய மின்மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே மேம்பட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறது. இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பிற்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவினை அளித்து வரும் நிலையில், இலங்கை அதிபருடனான ஜெய்சங்கரின் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.