கருத்து கணிப்புகளை பொய்யாக்கி ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
ஹரியானா மாநிலத்தில் எந்த கட்சியும் தொடர்ந்து 3 முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்தது இல்லை என்பது வரலாறு. ஆனால், அந்த வரலாற்றை தற்போது மாற்றி அமைத்துள்ளது பாஜக.
“ஹரியானாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால், அரசு மீது நிச்சயமாக மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருதின. மேலும், நாட்டையே ஸ்தம்பிக்க வைத்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம், மல்யுத்த வீரர்களின் போராட்டம் உள்ளிட்டவையும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும்” என பலரும் ஆருடம் கூறி வந்தனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் இதற்கு விதிவிலக்காக அமையவில்லை. ஆனால், இத்தகைய ஆருடங்களையும், கருத்து கணிப்புகளையும் அடித்து நொறுக்கியுள்ளது ஹரியானா மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு.
ஹரியானாவில் பாஜக வெற்றிப்பெறுவதற்கான முக்கிய காரணம், காங்கிரஸ்தான். சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறப்போகிறோம் என்பதில் காங்கிரஸ் கட்சியினருக்கு அதீத நம்பிக்கை இருந்தது. இதன் காரணமாக, தேர்தலுக்கு முன்பாகவே யார் முதலமைச்சர் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் எழத் தொடங்கியது.
அக்கட்சியின் மூத்த தலைவர்களான பூபிந்தர் சிங் ஹூடாவும், குமாரி செல்ஜாவும் தாங்கள்தான் முதலமைச்சராக வேண்டும் என கூறி கோஷ்டி பூசலில் ஈடுபட தொடங்கினர். ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியையே இரண்டாக பிளவுப்படும் சூழலும் ஏற்பட்டது.
பாஜகவுக்கு எதிராக சண்டை செய்வதை விடுத்து, தங்களுக்குள்ளேயே காங்கிரஸ் தலைவர்கள் சண்டை செய்து கொண்டிருந்ததால், காங்கிரஸ் கட்சி தற்போது தோல்வியை தழுவியுள்ளது.
ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் சுமார் 22 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற்றாலே வெற்றியை உறுதிசெய்து விடலாம் என காங்கிரஸ் எண்ணியது. ஜாட் சமூகத்தை சேர்ந்த பூபிந்தர் சிங் ஹூடா அந்த வாக்குகளை காங்கிரசுக்கு பெற்றுத் தருவார் எனவும் கருதப்பட்டது.
ஆனால், காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் பூபிந்தர் சிங் ஹூடா முதலமைச்சராக்கப்படுவரா என்ற கேள்வி எழுந்ததால், ஜாட் சமூக வாக்குகள் சிதறியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்காததும், பாஜகவுக்கு சாதமாக அமைந்தது. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் ஆம் ஆத்மியை காங்கிரஸ் கட்சி தனது கூட்டணியில் இணைத்துக் கொள்ளவில்லை. தேர்தல் முடிவில் பல தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. ஆம் ஆத்மியின் உதவி இருந்திருந்தால், அந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கும்.
ஆத்ஆத்மி மட்டுமல்லாமல், பல தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களும் காங்கிரசின் வாக்குகளை பிரித்துள்ளதை தேர்தல் முடிவு காட்டுகிறது.
மறுபுறம், காங்கிரசை போல கோஷ்டி பூசலில் ஈடுபடாமல் பாஜக ஒற்றுமையுடன் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது. பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக நாயப் சிங் சைனி முன்னிறுத்தப்பட்டார். மாநிலம் முழுவதும் பாஜக அமைச்சர்கள் முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டனர்.
ஜாட் சமூகத்தின் வாக்குகளை மட்டும் குறிவைக்காமல், அனைத்து சமூதாய மக்களின் வாக்குகளையும் பெற பாஜக முயற்சித்தது. இதன் பலனாக பல இடங்களில் பட்டியல் சமூக மக்களின் வாக்குகளையும்கூட பாஜக தனதாக்கியுள்ளது. குறிப்பாக, மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் 8 தொகுதிகளில் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது.
இப்படி, பாஜகவின் ஒற்றுமை, பாஜக தலைவர்களின் களப்பளி, காங்கிரசின் கோஷ்டி சண்டை, காங்கிரசின் தவறான தேர்தல் வியூகம் உள்ளிட்டவை ஹரியானாவில் பாஜகவுக்கு மகத்தான வெற்றியை பெற்று தந்துள்ளது.