மறைந்த ரத்தன் டாடா கடந்து வந்த பாதை தற்போது பார்க்கலாம்..!
நவல் டாடா- சுனு தம்பதியின் மகனாக 1937 டிசம்பர் 28-ல் மும்பையில் பிறந்தவர் ரத்தன் டாடா, இவர் டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன்.
1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி பட்டம், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.
1962-ல் டாடா குழுமத்தில் இணைந்த ரத்தன் டாடா, 1971-ல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது ஆலோசனைகளால் நிதி நெருக்கடியில் இருந்து நெல்கோ மீண்டது.
1991-ம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல புதிய திட்டங்களைப் புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார்.
கோரஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது.
மேலும், பங்குச் சந்தையில் மிக அதிக சந்தை முதலீடு கொண்டதாக டாடா குழுமம் திகழ்கிறது. இவரது வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானது. நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.
நடுத்தர குடும்பத்தினருக்கு என ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டாடா நானோ காரினை உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வந்தார் ரத்தன் டாடா,
மேலும், கொரோனா நிவாரண பணிகளுக்காக சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.
பத்மபூஷன், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், கவுரவக் குடிமகன் அந்தஸ்து வழங்கி சிங்கப்பூர் அரசு கெளரவித்தது.மேலும், பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றுள்ளார்.
டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்.
2012 வரை டாடா குழுமத் தலைவராகவும், பின்னர், டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராகவும் இருந்து வழிநடத்தியவர் ரத்தன் டாடா.