ஆசியான் உச்சி மாநாட்டையொட்டி, லாவோஸ் தலைநகர் வியன்டியன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசியான்- இந்தியா உச்சி மாநாடு வியன்டியன் நகரில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, வியன்டியன் சென்ற பிரதமர் மோடிக்கு லாவோஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் விளைவோங் பௌத்தகம், மலர்க்கொத்துக் கொடுத்து வரவேற்பு அளித்தார். தொடர்ந்து அந்நாட்டின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து தங்கும் விடுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பரிசுப் பொருட்கள் வழங்கி வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, சிறுவர்களை கொஞ்சி மகிழ்ந்தார்.
இதேபோல விசுவாமித்திரர் அருளிய காயத்ரி மந்திரம் ஓதி, பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது பிரதமர் மோடியும் இருகரம் கூப்பி, காயத்ரி மந்திரம் ஓதி அவர்களது வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, வியன்டியன் ஹோட்டலில் அரங்கேறிய ராமாயண நாடகத்தை பிரதமர் மோடி ஆர்வத்துடன் பார்வையிட்டார். பெளத்த மதக் குழுவினரால் ராமாயணம் லாவோஸுக்கு கொண்டு வரப்பட்டதும், அது அந்நாட்டின் தேசிய காவியமாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பெளத்த பிக்குகளை சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது பெளத்த மதத்தின் புனித கயிற்றை பிரதமர் மோடிக்கு கட்டிய பெளத்த பிக்கு, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், அஸ்ஸாமின் கலாசார பாரம்பரியமிக்க பிஹூ நடனத்தை லாவோஸ் பெண்கள் இந்திய மரபுப்படி, சேலை கட்டி தத்ரூபமாக ஆடினர். இதைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.