சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் அறிவித்துள்ளார்.
22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அவர், அடுத்த மாதம் ஸ்பெயினின் மலாகா நகரில் நடைபெறும் டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
டென்னிஸ் ஜாம்பவானான ரஃபேல் நடால், ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். மேலும், 14 முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று முத்திரை பதித்துள்ளார்.
தனது ஓய்வு முடிவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, 13 மொழிகளில் தனது ரசிகர்களுக்கு ரஃபேல் நடால் நன்றி தெரிவித்துள்ளார். அதில் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட்டில் உடல் ரீதியிலான சில சிரமங்களை எதிர்கொண்டதாக நடால் கூறியுள்ளார்.