கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் நம்பகத்தன்மை மேம்பட்டு, உலகின் வலிமையான மற்றும் மரியாதைக்குரிய நாடாக இந்தியா மாறியிருப்பதை தற்போது அனைவரும் உணர்வதாக, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விஜயதசமி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சாஸ்திர பூஜையில் ஈடுபட்டார். இதில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களும் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், வங்கதேசத்தில் நடப்பது இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கும் ஒரு பாடம் என தெரிவித்தார். வங்கதேசத்தில் கொடுங்கோல் அடிப்படைவாத இயல்பு உள்ளது என்றும், இந்துக்கள் உட்பட சிறுபான்மையினரின் தலைக்கு மேல் ஆபத்தின் வாள் தொங்குகிறது என்றும் கூறினார்.
சகிப்பின்மை இந்தியாவுக்கு எதிரானது என்றும், அனைத்து மதங்களையும் நாம் மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பன்முகத்தன்மை ஒரு நல்லொழுக்கம் என்றும், அதை ஒரு பிரிவாக பார்க்கக்கூடாது என்றும் கூறினார். தர்மம்தான் இந்தியாவின் வாழ்க்கை மற்றும் நமது உத்வேகம் என்று கூறினார்.
“சூழ்நிலைகள் சில நேரங்களில் சவாலாகவும், சில சமயங்களில் நல்லதாகவும் இருக்கும். மனித வாழ்க்கை முன்பை விட பொருளாதார ரீதியாக மகிழ்ச்சியாக உள்ளது, ஆனால் இந்த மகிழ்ச்சியான மற்றும் வளர்ந்த மனித சமுதாயத்தில், பல போராட்டங்கள் தொடர்வதை காண்கிறோம். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
அண்டை நாடுகளில், குறிப்பாக வங்கதேசத்தில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்ட சமீபத்திய நிகழ்வுகள் குறித்து பகவத் எச்சரித்தார்.
வங்க தேசத்தில் இந்துக்கள் எந்த காரணமும் இல்லாமல் வன்முறையை எதிர்கொள்கின்றனர் என்றும், வேகமாக வளரத் தொடங்கும் எந்த தேசமும் கீழே இழுக்கப்படுவது ஒரு சடங்காகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க முயற்சி நடைபெறும் என்றும், இதற்கு உதாரணம் நமது அண்டை நாடான வங்கதேசம் என்றும் அவர் கூறினார்.