2026 தேர்தலுக்குள் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெலவெலத்துப் போகும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
மழையிலிருந்து மக்களை பாதுகாப்பது ஒரு புறம் என்றாலும் குளங்களை தூர்வாரி குடிநீரை சேமித்திருக்க வேண்டும். பெரியார் அணையில் குழாய்கள் உடைந்துள்ளதால் குடிநீர் வீணாகி விட்டது. குடிதண்ணீர் இல்லாமல் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து விட்டதால் பிரச்சனை அதிகமாகி விட்டது.
திமுக அரசு சென்னை, மதுரை, திருச்சி என அனைத்து மாவட்டங்களையும் மழைக்கு தயார் செய்வதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. உதயநிதி வார் ரூமில் அமர்ந்து விட்டதால் மழைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள், விடியா அரசு இன்று விளம்பர அரசாக மாறிவிட்டது.
மிகப்பெரிய வானியல் சாகசத்தை கூட மக்கள் மகிழ்ச்சியுடன் பார்க்க கூடிய ஏற்பாடுகளை செய்ய முடியாத அரசு எதற்கெடுத்தாலும் விளம்பரம் தான். அன்னை மீனாட்சி நம்மை காப்பாற்றுவாள் ஆனால் இந்த திமுக ஆட்சியை நம்மை காப்பாற்றுமா என்றுதான் கவலையாக உள்ளது. திமுக ஆட்சியில் பருப்பு கூட வேகாது போல உள்ளது. தீபாவளிக்கு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைக்காது என அச்சுறுத்தல் மக்களிடம் இருக்கிறது. என அவர் தெரிவித்தார்.
அதிமுக பாஜக கூட்டணி குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்த கேள்விக்கு:
தேர்தல் வரும்போது எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எதைப்பற்றி வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதைக்கு எங்கள் வேலை எங்கள் கட்சியை பலப்படுத்துவதற்கு உறுப்பினர்களை சேர்ப்பதுதான். கூட்டணி குறித்து எங்கள் அகில பாரத தலைவர்கள் முடிவு செய்வார்கள் என அவர் தெரிவித்தார்.