அதிமுகவின் 53ம் ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்தூவி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
அதிமுகவை எம்.ஜி.ஆர் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தொடங்கிய நிலையில், ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தினத்தை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவின் 53ம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதை தொடர்ந்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் அதிமுகவின் 53ம் ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் ஜெ.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.