திருச்செந்தூரில் கடல் 50 அடி தூரம் உள்வாங்கிய நிலையில், பக்தர்கள் ஆபத்தை உணராமல் பாசி படிந்த பாறைகளின் மீது ஏறி நின்று கடலை பார்த்து ரசித்தனர்.
திருச்செந்தூர் கடல் அமாவாசை, பௌர்ணமி நெருங்கும் நாட்களில் உள்வாங்கி காணப்படும். அதன்படி பௌர்ணமியையொட்டி திருச்செந்தூர் கடற்கரை நாழிக்கிணறு முதல் அய்யா கோயில் வரை சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கிக் காணப்பட்டது.
இதனால் கடலில் உள்ள பாசி படிந்த பாறைகள், சிலைகள் உள்ளிட்டவை வெளியே தெரிந்தன. ஆபத்தை உணராத பக்தர்கள் பலர், பாசி படிந்த பாறைகளின் மீது ஏறி நின்றனர்.
அப்போது அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் திணறினர். எனவே, எச்சரிக்கையை மீறும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.