நெல்லை ஜல் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்ட நிலையில், அங்கு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு நடத்தி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். பயிற்சி மையத்தில் நடந்தது என்ன? இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்…
நெல்லை மாநகரில் ஜல் நீட் அகாடமி என்ற பெயரில் நீட் பயிற்சி மையம் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தை கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு இந்த பயிற்சி மையத்தில் பயின்ற 12 பேருக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைசேர்ந்த பல மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஒவ்வொருவரிடம் இருந்தும் சராசரியாக, 60 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜல் நீட் அகாடமி பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் சிலர் பயிற்சி வகுப்பின்போது தூங்கிய நிலையில், உரிமையாளர் ஜலாலுதீன் அவர்களை வரவழைத்து பிரம்பால் சரமாரியாக அடித்து சித்திரவதை செய்துள்ளார். அத்துடன் அங்கு பயிலும் மாணவிகள் காலணிகளை சரியாக அடுக்கி வைக்கவில்லை எனக்கூறி, வகுப்பறையில் வைத்தே அவர்கள் மீது காலணியை எடுத்து வீசி எறிந்துள்ளார்.
இந்த சம்பங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் உடனடியாக செய்தி வெளியிடப்பட்டது. தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்ட 30 நிமிடங்களில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், ஜல் நீட் பயிற்சி மையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.
அங்கு பயின்று வரும் மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய கண்ணதாசன், அவர்கள் அளித்த வாக்குமூலங்களையும் பதிவு செய்து கொண்டார். அப்போது மாணவர்கள் தங்களது உடலில் உள்ள தழும்புகளை காட்டி, தங்களுக்கு இழைக்கப்படும் இன்னல்கள் தொடர்பாக எடுத்துரைத்தனர்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கண்ணதாசன், நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கும் என தெரிவித்தார்.
மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஜல் நீட் பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஜலாலுதீன் அஹமத் மீது நெல்லை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பயிற்சி மையத்தின் பிற நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவான உரிமையாளர் ஜலாலுதீன் அஹமதை தீவிரமாக தேடி வருகின்றனர்.